வரும் 2011ம் ஆண்டில் நான்கு சூரிய கிரகணம் மற்றும் இரண்டு சந்திர கிரகணம் என, ஆறு கிரகணங்கள் நிகழ உள்ளன. 2,041 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரே ஆண்டில் ஆறு கிரகணங்கள் நிகழ உள்ளன. இதுதொடர்பாக இமாச்சல பிரதேசம் கந்தகாட்டில் உள்ள சுற்றுச் சூழல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜிவ் சர்மா சூர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்த ஆண்டு நிகழ உள்ள நான்கு சூரிய கிரகணங்களில் முதல் கிரகணம் ஜனவரி 4ம் தேதி பகல் 12.10க்கு துவங்கி மாலை 4.31க்கு முடிவடைகிறது. இரண்டாவது சூரிய கிரகணம் ஜூன் 2ம் தேதி நிகழ்கிறது. இரவு 12.55க்கு துவங்கி அதிகாலை 4.37க்கு முடிவடைகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியாது. மற்ற இரண்டு சூரிய கிரகணங்கள் ஜூலை 1 மற்றும் நவம்பர் 25ம் தேதிகளில் நிகழ்கின்றன. அவற்றையும் இந்தியாவில் பார்க்க முடியாது.
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் ஜூன் 15ம் தேதி நிகழ்கிறது. இரவு 11.53க்கு துவங்கி அதிகாலை 3.33க்கு முடிகிறது. இந்த கிரகணத்தை இந்தியாவில் பார்க்க முடியும். மற்றொரு சந்திர கிரகணம் டிசம்பர் 10ம் தேதி நிகழ்கிறது. மாலை 6.15க்கு துவங்கி இரவு 9.48க்கு முடிகிறது. ஒரே ஆண்டில் ஆறு கிரகணங்கள் நிகழ்வது 2,041 ஆண்டுகளுக்குப் பின், இந்த ஆண்டுதான் நிகழ உள்ளது. இவ்வாறு ராஜிவ் சர்மா சூர் கூறினார்.